Sunday 30 October 2016



தீபாவளி திருநாளில் தொலைக்காட்சி பெட்டியில் தம்மைப் புதைத்து நேரம் கழிப்பதை விரும்பாமல்  சமுதாயத்தில் பின்தங்கியோர் , ஆதரவற்றோர் போன்ற மக்களை மனதில் நினைத்து அவர்களையும் பண்டிகை நாளை கொண்டாட செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தஞ்சாவூர் AIBSNLPWA தோழர்கள் மாவட்ட செயலர் தோழர் வி  .சுவாமிநாதன் தலைமையில் தீபாவளி தினத்தன்று 
ஒசானம் முதியோர் இல்லம் தஞ்சை ,    மனவளம் குன்றியோர் காப்பகம் தஞ்சை , 
முதியோர் மற்றும் அநாதை இல்லம் கடுவெளி தஞ்சை 
ஆகிய இடங்களுக்கு  சில முன்னணி தோழர்கள், பெண் உறுப்பினர்கள் ஒரு சிலருடன் சென்று அங்கிருப்பவர்களுக்கு புத்தாடைகள், இனிப்பு வகைகள் வழங்கி அவர்கள் ஆவலுடன் உண்பதைப்பார்த்து இவர்களும் மன மகிழ்ந்து தம்மையே  மறந்துள்ளனர்.

அங்கிருந்த மக்கள் புத்தாடை புணைந்து ஆடி , பாடி நடனமாடி சிலம்பம் சுழற்றி வெடிகளை வெடித்து மிகவும் ஆனந்தமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த சந்தோஷ தருணங்களை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது.
 ஒவ்வொரு ஆண்டும் தஞ்சையில் இது போன்ற அன்பளிப்பு நிகழ்வுகள் நம் சங்கம் , சேவையில் இருப்போர் சங்கம் , தனிப்பட்டவர்களின் அன்பளிப்பு ஆகிய பேராதரவுடன் நடை பெற்று வருகிறது.
இது தவிர நம் தோழர் ஒருசிலரின் மணநாள், 60 வயது, 70 வயது , பிறந்த நாள் ஆகிய வைபவங்களில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அன்னதானம் செய்து மகிழ்கிறார்கள். 
தனி மனிதனொருவருக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்றாயே பாரதி ,தஞ்சை தோழர்கள் இருக்கும் வரை எவரையும்  அந்த நிலைக்குத் தள்ள அனுமதியோம் .
சேவை செய்வதே ஆனந்தம் , பகிர்ந்துண்பதே பரமானந்தம் எனும் மரபில் வாழும் தஞ்சை தோழர்களை மனதார வாழ்த்துவோம்.





No comments:

Post a Comment