Thursday 30 December 2021

 

 AIBSNLPWA கடலூர் மாவட்ட சங்கத்தின் ஏழாவது மாவட்ட மாநாடு சிதம்பரத்தில் சிவகாமியம்மை திருமண மண்டபத்தில் மிகுந்த எழுச்சியோடும் உற்சாகத்தோடும் நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக தேசியக்கொடியை மாவட்ட தலைவர் தோழர்  P ஜெயராமன் ஏற்றினார். நமது சங்க கொடியை சிதம்பரத்தின் தோழர் N தட்சிணாமூர்த்தி ஏற்றினார். 78 வயது இளைஞர் தோழர்

K வெங்கட்ரமணன் விண்ணதிர கோஷங்களை எழுப்பி மாநாட்டின் தொடக்கத்திலேயே உறுப்பினர்களிடையே உற்சாகத்தை உண்டாக்கினார். மாவட்ட தலைவர் தோழர் P ஜெயராமன் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். சிதம்பரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர்G S குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் N திருஞானம் அஞ்சலி உரையாற்றினார். தோழர் ஜெயராமன் மாவட்ட தலைவர் தலைமை உரை ஆற்றினார். பின்னர் சிறப்பு விருந்தினர்களின் கருத்துரையும் சிறப்புரையும் உலா வந்தன.

முதலில் தோழர் D விக்டர் ராஜ் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். அடுத்து நமது சங்கத்தின் முன்னோடி முதுபெரும் தலைவர் K முத்தியாலு அவர்கள் ஓய்வு ஊதியம் நமது உரிமை அது அரசு அளிக்கும் சலுகையல்ல என்று முழக்கமிட்டார்.  2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஓய்வுதியம் மறுக்கப்பட்டதையும National pension scheme போன்ற அலங்கார வார்த்தைகளால் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை மறுத்ததை கவலையோடு நினைவு கூர்ந்தார். BSNL ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஓய்வூதியத்தை பெற்றுத்தந்த தலைவர்களை நினைவு கூர்ந்தார்.

அடுத்ததாக நம்மால் அன்போடு DG என்று அழைக்கப்படும் தோழர் D கோபாலகிருஷ்ணன் பென்ஷன் அனாமலி வழக்கில் நமது சங்கம் எடுத்த முயற்சி எதிர்கொண்ட நீதிமன்ற வழக்குகள் போடப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் போன்றவற்றை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் எடுத்துரைத்தார். அடுத்ததாக நாம் ஆவலோடு எதிர்பார்க்கும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி BSNL நிர்வாகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஓய்வு ஊதியம் மாற்றம் பெறவேண்டி நமது மத்திய சங்கம் எடுத்துவரும் முயற்சிகளை பட்டியலிட்டார். வழக்கில் வெற்றி பெறுவதற்கான அனைத்து தரவுகளையும் திரட்டி 400 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை வழக்கறிஞரிடம் கொடுத்து வழக்கிற்கு வலுசேர்க்கும் முயற்சிகளை எடுத்துரைத்தார். இதற்காக 49 இணைப்புகளை (annexures) வைத்ததையும் குறிப்பிட்டார். பலகட்ட முயற்சிகளுக்கும் பலன் இல்லாததால் மத்திய செயற்குழு பல முறை கூடி விவாதித்து நீதிமன்றம் சென்றதை தெளிவுபடுத்தி கூறினார். மாநில பொருளாளர் தோழர் S.காளிதாசன் சிதம்பரம் தோழர்கள் மாவட்ட மாநாடு சிறப்புற நடத்துவதை பாராட்டினார்.

மாநிலச் செயலாளர் தோழர் R வெங்கடாசலம் மாநிலச் சங்கம் ஆற்றிவரும் அளப்பரிய பணிகளை மிக எளிய முறையில் எடுத்துரைத்தார். வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்ட பல பிரச்சனைகளை தீர்வுகள் கண்டதில் உள்ள தீவிர முயற்சிகளை எடுத்துரைத்தார். மாவட்ட சங்கம் ஒரு முன்னணி மாவட்டமாகவும் சிறப்பாகவும் பணிபுரிந்து மாநிலச் சங்கத்திற்கு உதவிகரமாக இருப்பதாக கூறினார். மத்திய சங்க நிர்வாகிகள் கொரோனா தொற்று காலகட்டத்திலும் கடுமையாக பணியாற்றியதை நினைவு கூர்ந்தார். மாநிலச் சங்கம் ஆற்றியுள்ள பணிகளை பட்டியலிட்டார். அகில இந்திய பொருளாளர் தோழர் T S விட்டோபன் சங்க செயல்பாடுகள் பற்றியும் நாம் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சனைகளை பற்றியும் ஆழமாக அலசினார். மாநிலச் சங்க உதவிச் செயலாளர் தோழர்

S .சுந்தர கிருஷ்ணன் தான் மாநிலச் செயலாளரோடு இணைந்து செயல்படுவது பற்றியும் அதனால் தீர்க்கப்பட்ட பல பிரச்சனைகளை பற்றி எடுத்துரைத்தார். கடலூர் மாவட்ட சங்கத்திற்கு அவர் ஆற்றிய பணியை நினைவு கூர்ந்தார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மாநிலத் தலைவர் தோழர் V.ராமா ராவ் குடும்ப ஓய்வூதியர்களுக்கு நமது சங்கம் ஆற்றி வரும் பணிகள் பற்றியும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் CGHS வசதியினை பெற்றிருந்ததை நினைவு கூர்ந்தார். கடலூர் மாவட்டசங்கம் பல நிகழ்வுகளுக்கு முன்னோடியாக இருப்பதையும் தோழர் ஜெயராமன் மாவட்ட தலைவர் குடும்ப ஓய்வூதியர்களின் பிரச்சனைகளை தேடி தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு ஒரு அரணாக விளங்குவதையும் சுட்டிக்காட்டினார். புதுவை மாவட்ட செயலாளர் தோழர் D.அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலாளர் தோழர் R அசோகன் மாவட்ட சங்க செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்து அதற்கான ஒப்புதலை பொதுக்குழுவில் பெற்றார். மாவட்ட பொருளாளர் தோழர் S காஜா கமாலுதீன் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார்நிதிநிலை அறிக்கையும் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள்  தோழர்கள் G S குமார் CDM, G கணேசன் VLU,S. நாராயணசாமி TNV, M ராஜலிங்கம் VDC ஆகியோர்கள் உரையாற்றினார்கள். மாநிலச் செயலாளர் அவர்கள் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான பணியை தொடங்கினார். அனைத்து நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தோழர்கள் P ஜெயராமன், R அசோகன் ,S.காஜா கமாலுதீன் ஆகியோர் முறையே மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். மாவட்ட மாநாட்டினை சிறப்புற நடத்தி அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த தோழர்கள் G S  குமார்,A  ஜெயக்குமார், பரமசிவம், தென்னரசு, ராஜேந்திரன், லட்சுமி நாராயணன் போன்ற தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர். நமது மாநிலச் சங்க வலைதள நிர்வாகியும் ஒளி ஓவியருமாகிய தோழர் N மோகன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.

காலைப் பொழுதில் இனிய சிற்றுண்டியும், மதியம் அறுசுவை உணவு அளித்தும் திக்குமுக்காடச் செய்த சிதம்பரம் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தரும். அந்தப்பகுதி தோழர்களின் கடுமையான உழைப்பும் அவர்கள் சங்கத்தில் பால் வைத்துள்ள ஈடுபாடும் சிறந்த  ஒருங்கிணைப்பும் மாநாட்டினை சிறப்புற நடத்துவதற்கு மிகுந்த உதவிகரமாக இருந்தது. இறுதியாக மாவட்ட செயலாளர் R அசோகன் நன்றி கூற மாநாடு இனிதே முடிவுற்றது. வருகை புரிந்த மத்திய மாநில சங்க நிர்வாகிகளுக்கும், திரளாக வந்து மாநாட்டினை சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி!  நன்றி!!  நன்றி.!!!